Total Pageviews

Search This Blog

ஒரு காவல் அலுவலரிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லுமா?

இதுகுறித்து தெரிந்து கொள்வதற்கு முன் காவல் அலுவலர் என்பவர் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 25 ஆனது காவல் அலுவலரிடம் அளிக்கப்படும் எந்தவொரு ஒப்புதலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நிரூபிக்கப்படக்கூடாது என்கிறது.

இந்தியாவில் சட்டம் காவல் அலுவலர் மீது எப்போதும் நம்பிக்கை வைப்பதில்லை. குற்றவாளியிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறும் விஷயத்தில் நீதிமன்றம் காவல்துறையினரை நம்பாது. ஆனால் இங்கிலாந்து நாட்டில் காவல் அலுவலரிடம் கொடுக்கும் வாக்குமூலமானது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 25 ன் கீழ் காவல் அலுவலர் யார்? காவல்துறையினர் தவிர வேறு சில அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் முறைப்படியான காவல் அலுவலர்களை போன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெறுமனே அவர்கள் முறைப்படியான காவல் அலுவலர்களைப்போன்று அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதற்காக அவர்களை, காவல் அலுவலர்கள் என்று கருதிவிட இயலாது.

சுங்க அலுவலர் ( customs Officer) ஒரு காவல் அலுவலரா? இந்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் "பஞ்சாப் அரசு Vs பர்காட்ராம் (AIR - 1962 - SC - 276), பல்லபதாஸ் லீலாதர் Vs சுங்க உதவி ஆட்சியர் (AIR - 1964 - SC - 481) ஆகிய வழக்குகளில் விளக்கம் அளித்துள்ளது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 25 ன்படி சுங்க அலுவலர் ஒரு காவல் அலுவலராக மாட்டார் என்று மேற்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

தீர்வை அலுவலர் (excise officer) ஒரு காவல் அலுவலரா? இந்தக் கேள்விக்கு உச்சநீதிமன்றம் "ராஜாராம் ஜெய்ஸ்வால் Vs பீகார் அரசு (AIR - 1964 - SC - 838) என்ற வழக்கில் விளக்கம் அளித்துள்ளது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 25 ன் கீழ் தீர்வை அலுவலர் ஒரு காவல் அலுவலர் ஆவார் என்று மேற்கண்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே உச்சநீதிமன்றம்" படுக்ஜோடி Vs மைசூர் அரசு (AIR - 1966 - SC - 1746) என்ற வழக்கில், தீர்வை அலுவலருக்கு விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 173 ன் கீழ் இறுதியறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் வழங்கப்படாததால் அவர் ஒரு காவல் அலுவலர் ஆகமாட்டார் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வன அலுவலர் (forest Officer) ஒரு காவல் அலுவலரா? இந்த கேள்விக்கு கேரளா உயர்நீதிமன்றம் "வனபாதுகாப்பு அலுவலர் சங்கதாரா 2ஆவது சரகம் Vs அபூபக்கர் (1989 - CRI LJ - KERALA - 2038)" என்ற வழக்கில் விளக்கம் அளித்துள்ளது. வனப்பகுதியில் காட்டு எருமைகளை வேட்டையாடி கொன்றதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் விலங்கின உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து வனபாதுகாப்பு அலுவலர் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வனப் பாதுகாப்பு அலுவலருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173 ன் கீழ் இறுதியறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர்களுக்கு காவல் அலுவலர்களுக்கு உள்ள சில அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள காரணத்தால் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

விஏஓ (Village Administrative officer) ஒரு காவல் அலுவலரா? இந்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் "அகான்மன் போரா Vs அஸ்ஸாம் அரசு (1988 - CRI LJ - 573)" என்ற வழக்கில் விளக்கம் அளித்துள்ளது. விஏஓ, காவல் துறையினருக்கு உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஆனால் அதற்காக விஏஓ ஒரு காவல் அலுவலராக மாட்டார். எனவே விஏஓ முன்பு கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 25ஆல் தாக்கப்படாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

துறை சார்ந்த விசாரணையில் அளிக்கப்படும் (Departmental Enquiries) ஒப்புதல் வாக்குமூலம் செல்லுமா? இந்தக் கேள்விக்கு உச்சநீதிமன்றம் "குல்தீப் சிங் Vs பஞ்சாப் அரசு (AIR - 1997 - SC - 82)" என்ற வழக்கில் விளக்கம் அளித்துள்ளது. காவல் அலுவலரிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமே செல்லாது எனும்போது துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் செல்லாது. ஆனால் சில நேரங்களில் துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ளும் அலுவலரை வைத்து அதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்

No comments:

Post a Comment

Followers