நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசரமாகப் பட்டியலிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தீபாவளி நெருங்கி வருவதால், பலர் ஏற்கனவே பட்டாசு தொழிலில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்றும், பட்டாசுக்கு தடை விதித்தால், வணிகர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டது.
இதைக் கவனித்த நீதிமன்றம், மனுதாரரிடம் அவர் முன்னதாகவே வந்திருக்க வேண்டும் என்றும், தீபாவளிக்குப் பிறகு வருமாறும் கூறியது.
தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரியும் டெல்லியில் விதிக்கப்பட்ட பட்டாசு தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.