ஒரு_அரசு_ஊழியர் மீது வழக்கு தொடர அரசிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் " சங்கரன் மொய்த்ரா Vs சாதனா தாஸ் (AIR-2006-SCC-1599)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
ஆனால் அரசு அதிகாரி ஒருவர், அரசு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றிருந்தால், அவர் மீதுள்ள வழக்கினை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அரசிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதியை பெற வேண்டும். அந்த குற்றச் செயலானது அலுவலக ரீதியான ஒரு கடமையில் ஈடுபட்டிருக்கும் போது நடைபெற்றிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். ஒரு அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அவருடைய அலுவலக கடமை என்கிற வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தாது.
ஓர் அதிகாரியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், அந்த அதிகாரியின் அலுவலக கடமைக்கும் இடையே நேரடியாகவும், நியாயமாகவும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வேறு விதமாக கூற வேண்டும் என்றால் மறைமுகமான அல்லது நியாயமற்ற வகையில் அந்த செயலுக்கு தொடர்பு இருந்தால் அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழான பாதுகாப்பை பெற முடியாது.
ஒரு குற்றச் செயலை புரிவதற்கு அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் அந்த அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை பெற முடியாது. அந்த குற்றச் செயலானது அந்த அதிகாரி அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றும் போது நடைபெற்றுள்ளதா? என்பதை அந்தந்த வழக்கு சங்கதிகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
ஓர் அரசு ஊழியர் அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றுவதற்காக நியாயமான செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். அவருடைய கடமையை நிறைவேற்றுவதற்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தால் பிரிவு 197 ன் கீழ் பாதுகாப்பினை பெற இயலாது.
இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை " I. ஈஸ்வரன் Vs காவல்துறை கண்காணிப்பாளர், CBCID, திருச்சி மாவட்டம் மற்றுமொருவர் (2015-3-MLJ-CRL-698)" என்ற வழக்கில் விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.